Sunday, August 03, 2008

பராபரக்கண்ணி

43. பராபரக்கண்ணி

சீராருந் தெய்வத் திருவருளாம் பூமிமுதல்
பாராதி யாண்ட பதியே பராபரமே. 1.

கண்ணாரக் கண்டோர் கருப்பொருள்கா ணாமலருள்
விண்ணூ டிருந்தஇன்ப வெற்பே பராபரமே. 2.

சிந்தித்த எல்லாமென் சிந்தையறிந் தேயுதவ
வந்த கருணை மழையே பராபரமே. 3.

ஆரா அமுதே அரசே ஆனந்தவெள்ளப்
பேராறே இன்பப் பெருக்கே பராபரமே. 4.

ஆரறிவார் என்ன அனந்தமறை ஓலமிடும்
பேரறிவே இன்பப் பெருக்கே பராபரமே. 5.

உரையிறந்த அன்பருளத் தோங்கொளியா யோங்கிக்
கரையிறந்த இன்பக் கடலே பராபரமே. 6.

எத்திக்குந் தானாகி என்னிதயத் தேயூறித்
தித்திக்கும் ஆனந்தத் தேவே பராபரமே. 7.

திக்கொடுகீழ் மேலுந் திருவருளாம் பொற்பறிந்தோர்
கைக்குள்வளர் நெல்லிக் கனியே பராபரமே. 8.

முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே
சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே. 9.

கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த
விண்ணேஆ னந்த வியப்பே பராபரமே. 10.

வாக்காய் மனதாய் மனவாக் கிறந்தவர்பால்
தாக்காதே தாக்குந் தனியே பராபரமே. 11.

பார்த்தஇட மெல்லாம் பரவெளியாய்த் தோன்றவொரு
வார்த்தைசொல்ல வந்த மனுவே பராபரமே. 12.

வானந்த மண்ணினந்தம் வைத்துவைத்துப் பார்க்கஎனக்(கு)
ஆனந்தம் தந்த அரசே பராபரமே. 13.

அன்பைப் பெருக்கிஎன தாருயிரைக் காக்கவந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே. 14.

வான்மெல் லாங்கொண்ட மெளனமணிப் பெட்டகத்துக்
கானபணி யான அணியே பராபரமே. 15.

ஓடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டவர்கள்
நாடும் பொருளான நட்பே பராபரமே. 16.

சித்த நினைவுஞ் செயுஞ்செயலும் நீயெனவாழ்
உத்தமர்கட் கான உறவே பராபரமே. 17.

போதாந்தப் புண்ணியர்கள் போற்றிசய போற்றியெனும்
வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே. 18.

முத்தாந்த வீதி முளரிதொழும் அன்பருக்கே
சித்தாந்த வீதிவருந் தேவே பராபரமே. 19.

ஈனந் தருமுடலம் என்னதுயான் என்பதற
ஆனந்தம் வேண்டி அலந்தேன் பராபரமே. 20.

என்புருகி நெஞ்சம் இளகிக் கரைந்துகரைந்து
அன்புருவாய் நிற்க அலந்தேன் பராபரமே. 21

சுத்த அறிவாய்ச் சுகம்பொருந்தின் அல்லால்என்
சித்தந் தெளியாதேன் செய்வேன் பராபரமே. 22.

மாறா அனுபூதி வாய்க்கின்அல்லால் என்மயக்கந்
தேறாதென் செய்வேன் சிவமே பராபரமே. 23.

தாகமறிந் தின்பநிட்டை தாராயேல் ஆகெடுவேன்
தேகம் விழுந்திடின்என் செய்வேன் பராபரமே. 24.

அப்பாஎன் எய்ப்பில் வைப்பே ஆற்றுகிலேன்போற்றிஎன்று
செப்புவதல் லால்வேறென் செய்வேன் பர்ரபரமே. 25.

உற்றறியும் என்னறிவும் உட்கருவி போற்சவிமாண்
டற்றும்இன்பந் தந்திலையே ஐயா பராபரமே. 26.

சொல்லால் அடங்காச் சுகக்கடலில் வாய்மடுக்கின்
அல்லால்என் தாகம் அறுமோ பராபரமே. 27.

பாராயோ என்னைமுகம் பார்த்தொருகால் என்கவலை
தீராயோ வாய்திறந்து செப்பாய் பராபரமே. 28.

ஓயாதோ என்கவலை உள்ளேஆ னந்த வெள்ளம்
பாயாதோ ஐயா பகராய் பராபரமே. 29.

ஓகோ உனைப்பிரிந்தார் உள்ளங் கனலில்வைத்த
பாகோ மெழுகோ பகராய் பராபரமே. 30.

கூர்த்தஅறி வத்தனையுங் கொள்ளைகொடுத் துன்னருளைப்
பார்த்தவன்நான் என்னைமுகம் பாராய் பராபரமே. 31.

கடலமுதே தேனேயென் கண்ணே கவலை
படமுடியா தென்னைமுகம் பார்நீ பராபரமே. 32.

உள்ளம் அறிவாய் உழப்பறிவாய் நான்ஏழை
தள்ளிவிடின் மெத்தத் தவிப்பேன் பராபரமே. 33.

கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போலஎனக்
கென்றிரங்கு வாய்கருணை எந்தாய் பராபரமே. 34.

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிஎண்ணி ஏழைநெஞ்சம்
புண்ணாகச் செய்ததினிப் போதும் பராபரமே. 35.

ஆழித் துரும்பெனவே அங்குமிங்கும் உன்னடிமை
பாழில் திரிவதென்ன பாவம் பராபரமே. 36.

கற்றஅறி வால்உனைநான் கண்டவன்போற் கூத்தாடில்
குற்றமென்றென் நெஞ்சே கொதிக்கும் பராபரமே. 37.

ஐயோ உனைக்காண்பான் ஆசைகொண்ட தத்தனையும்
பொய்யோ வெளியாப் புகலாய் பராபரமே. 38.

துன்பக்கண் ணீரில் துளைந்தேற்குன் ஆனந்த
இன்பக்கண் ணீர்வருவ தெந்தாள் பராபரமே. 39.

வஞ்சனையும் பொய்யும்உள்ளே வைத்தழுக்கா றாயுளறும்
நெஞ்சனுக்கும் உண்டோ நெறிதான் பராபரமே. 40.

பாசம்போய் நின்றவர்போற் பாராட்டி யானாலும்
மோசம்போ னேன்நான் முறையோ பராபரமே. 41.

நன்றறியேன் தீதறியேன் நானென்று நின்றவனார்
என்றறியேன் நான்ஏழை என்னே பராபரமே. 42.

இன்றுபுதி தன்றே எளியென் படுந்துயரம்
ஒன்றும்அறி யாயோ உரையாய் பராபரமே. 43.

எத்தனைதான் சன்மமெடுத் தெத்தனைநான் பட்டதுயர்
அத்தனையும் நீயறிந்த தன்றோ பராபரமே. 44.

இந்தநாள் சற்றும் இரங்கிலையேற் காலன்வரும்
அந்தநாள் காக்கவல்லார் ஆர்காண் பராபரமே. 45.

உற்றுற்று நாடி உளம்மருண்ட பாவியைநீ
சற்றிரங்கி ஆளத் தகாதோ பராபரமே. 46.

எள்ளளவும் நின்னைவிட இல்லா எனைமயக்கில்
தள்ளுதலால் என்னபலன் சாற்றாய் பராபரமே. 47.

பாடிப் படித்துலகிற் பாராட்டி நிற்பதற்கோ
தேடி யெனையடிமை சேர்த்தாய் பராபரமே. 48.

சொன்னதைச் சொல்வதல்லாற் சொல்லறவென் சொல்லிறுதிக்
கென்னததைச் சொல்வேன் எளியேன் பராபரமே. 49.

சொல்லும் பொருளும்அற்றுச் சும்மா இருப்பதற்கே
அல்லும் பகலுமெனக் காசை பராபரமே. 50.

நேச நிருவிகற்ப நிட்டையல்லால் உன்னடிமைக்
காசையுண்டோ நீயறியா தன்றே பராபரமே. 51.

துச்சனென வேண்டாஇத் தொல்லுலகில் அல்லல்கண்டால்
அச்சம் மிகவுடையேன் ஐயா பராபரமே. 52.

கண்ணாவா ரேனும்உனைக் கைகுவியா ராயின் அந்த
மண்ணாவார் நட்பை மதியேன் பராபரமே. 53.

கொல்லா விரதங் குவலயமெல் லாம்ஓங்க
எல்லார்க்குஞ் சொல்லுவதென் இச்சை பராபரமே. 54.

எத்தாற் பிழைப்பேனோ எந்தையே நின்னருட்கே
பித்தானேன் மெத்தவுநான் பேதை பராபரமே. 55.

வாயினாற் பேசா மவுனத்தை வைத்திருந்துந்
தாயிலார் போல்நான் தளர்ந்தேன் பராபரமே. 56.

அன்னையிலாச் சேய்போல் அலக்கணுற்றேன் கண்ணார
என்னகத்தில் தாய்போல் இருக்கும் பராபரமே. 57.

உற்றுநினைக் கில்துயரம் உள்ளுள்ளே செந்தீயாய்ப்
பற்றநொந்தேன் என்னைமுகம் பார்நீ பராபரமே. 58.

பொய்யன் இவன் என்றுமெள்ளப் போதிப்பார் சொற்கேட்டுக்
கைவிடவும் வேண்டாமென் கண்ணே பராபரமே. 59.

எண்ண மறிந்தே இளைப்பறிந்தே ஏழைஉய்யும்
வண்ணந் திருக்கருணை வையாய் பராபரமே. 60.

நாட்டாதே யென்னையொன்றில் நாட்டி யிதமகிதங்
காட்டாதே யெல்லாம்நீ கண்டாய் பராபரமே. 61.

உன்னைநினைந் துன்நிறைவின் உள்ளே உலாவும்என்னை
அன்னைவயிற் றின்னம்அடைக் காதே பராபரமே. 62.

பரமுனக்கென் றெண்ணும் பழக்கமே மாறா
வரமெனக்குத் தந்தருள்என் வாழ்வே பராபரமே. 63.

வந்தித்து நின்னை மறவாக் கடனாகச்
சிந்திக்க நின்னதருள் செய்யாப் பராபரமே. 64.

எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி யிரங்கவும்நின்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே. 65.

வெட்டவெளிப் பேதையன்யான் வேறுகப டொன்றறியேன்
சிட்டருடன் சேர்அனந்த தெண்டன் பராபரமே. 66.

இரவுபக லற்றவிடத் தேகாந்த யோகம்
வரவுந் திருக்கருணை வையாய் பராபரமே. 67.

மால்காட்டிச் சிந்தை மயங்காமல் நின்றுசுகக்
கால்காட்டி வாங்காதே கண்டாய் பராபரமே. 68.

எப்பொருளும் நீயெனவே எண்ணிநான் தோன்றாத
வைப்பைஅழி யாநிலையா வையாய் பராபரமே. 69.

சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணமென்
றெம்மா லறிதற் கெளிதோ பராபரமே. 70.

முன்னொடுபின் பக்கம் முடியடிநாப் பண்ணறநின்
தன்னொடுநான் நிற்பதென்றோ சாற்றாய் பராபரமே. 71.

மைவ்வண்ணந் தீர்ந்த மவுனிசொன்ன தெய்வண்ணம்
அவ்வண்ணம் நிட்டை அருளாய் பராபரமே. 72.

வித்தன்றி யாதும் விளைவதுண்டோ நின்னருளாஞ்
சித்தன்றி யாங்களுண்டோ செப்பாய் பராபரமே. 73.

ஆங்கார மற்றுன் அறிவான அன்பருக்கே
தூங்காத தூக்கமது தூக்கும் பராபரமே. 74.

சிந்தை அவிழ்ந்தவிழ்ந்து சின்மயமா நின்னடிக்கே
வந்தவர்க்கே இன்பநிலை வாய்க்கும் பராபரமே. 75.

சொல்லாடா வூமரைப்போற் சொல்லிறந்து நீயாகின்
அல்லால் எனக்குமுத்தி ஆமோ பராபரமே. 76.

பேச்சாகா மோனம் பிறவா முளைத்ததென்றற்
காச்சாச்சு மேற்பயனுண் டாமோ பராபரமே. 77.

கெட்டியென்றுன் அன்பர்மலங் கெட்டயர்ந்தோர் பூரணமாந்
தொட்டிலுக்குட் சேய்போல் துயின்றார் பராபரமே. 78.

காட்ட அருள்இருக்கக் காணா திருள்மலத்து
நாட்ட மெனக்குவரல் நன்றோ பராபரமே. 79.

எத்தன்மைக் குற்ற மியற்றிடினுந் தாய்பொறுக்கும்
அத்தன்மை நின்னருளும் அன்றோ பராபரமே. 80.

எத்தனையோ தேர்ந்தாலும் என்னாலே இன்பமுண்டோ
சித்துருவே இன்பச் சிவமே பராபரமே. 81.

மண்ணொடுவிண் காட்டி மறைந்துமறையா அருளைக்
கண்ணொடுகண் ணாகஎன்று காண்பேன் பராபரமே. 82.

பஞ்சரித்து நின்னைப் பலகால் இரந்ததெல்லாம்
அஞ்ச லெனும்பொருட்டே அன்றோ பராபரமே. 83.

எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்
அங்கங் கிருப்பதுநீ அன்றோ பராபரமே. 84.

அனைத்துமாய் நின்றாயே யான்வேறோ நின்னை
நினைக்குமா றெங்கே நிகழ்த்தாய் பராபரமே. 85.

நின்போதத் தாலே நினைப்பு மறப்புமென்றால்
என்போதம் எங்கே இயம்பாய் பராபரமே. 86.

ஒன்றைநினைந் தொன்றைமறந் தோடுமனம் எல்லாம்நீ
என்றறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே. 87.

கொழுந்தில் வயிரமெனக் கோதறவுள் ளன்பில்
அழுந்துமவர்க் கேசுகமுண் டாகும் பராபரமே. 88.

பற்றும் பயிர்க்குப் படர்கொழுந்து போற்பருவம்
பெற்றவர்க்கே நின்னருள்தான் பேறாம் பராபரமே. 89.

யோகியர்க்கே ஞானம் ஒழுங்காம்பே ரன்பான
தாகியரும் யோகம்முன்னே சார்ந்தோர் பராபரமே. 90.

அல்லும் பகலும் அறிவாகி நின்றவர்க்கே
சொல்லும் பொருளுஞ் சுமைகாண் பராபரமே. 91.

எச்சிலென்று பூவை யிகழ்ந்தோர்க் குனைப்போற்றப்
பச்சிலையுங் கிள்ளப் ப்டுமோ பராபரமே. 92.

அந்தக் கரணம் அடங்கத் துறப்பதுவே
எந்தத் துறவினும்நன் றெந்தாய் பராபரமே. 93.

தன்னை அறிந்தால் தலைவன்மேற் பற்றலது
பின்னையொரு பற்றும்உண்டோ பேசாய் பராபரமே. 94.

அன்பாற் கரைந்துகண்ணீர் ஆறுகண்ட புண்ணியருக்
குன்பால் வரவழிதான் உண்டோ பராபரமே. 95.

தன்னை அறிந்தருளே தாரகமா நிற்பதுவே
உன்னை அறிதற் குபாயம் பராபரமே. 96.

கற்றகலை யால்நிலைதான் காணுமோ காண்பதெல்லாம்
அற்றவிடத் தேவெளியாம் அன்றோ பராபரமே. 97.

கண்மூடிக் கண்விழித்துக் காண்பதுண்டோ நின்னருளாம்
விண்மூடின் எல்லாம் வெளியாம் பராபரமே. 98.

நேரே நினதருளென் நெஞ்சைக் கவரின்ஒன்றும்
பாரேன் சுகமும் படைப்பேன் பராபரமே. 99.

வான்காண வேண்டின் மலையேற லொக்கும்உன்னை
நான்காணப் பாவனைசெய் நாட்டம் பராபரமே. 100.

வாதனைவிட் டுன்னருளின் மன்னினல்லால் வேறுமொரு
சாதனைதான் உண்டோநீ சாற்றாய் பராபரமே. 101.

பாரகமும் விண்ணகமும் பற்றாக நிற்பதருள்
தாரகத்தைப் பற்றியன்றோ சாற்றாய் பராபரமே. 102.

விளக்குந் தகளியையும் வேறென்னார் நின்னைத்
துளக்கமறச் சீவனென்று சொல்வார் பராபரமே. 103.

பாராதி நீயாப் பகர்ந்தால் அகமெனவும்
ஆராயுஞ் சீவனுநீ யாங்காண் பராபரமே. 104.

பொய்யைப்பொய் யென்றறியும் போதத்துக் காதரவுன்
மெய்யருளே அன்றோ விளம்பாய் பராபரமே. 105.

வருவான்வந் தேன்எனல்போல் மன்னியழி யுஞ்சகத்தைத்
தெரிவாக இல்லையென்ற தீரம் பராபரமே. 106.

மாயா சகமிலையேல் மற்றெனக்கோர் பற்றுமிலை
நீயேநான் என்றுவந்து நிற்பேன் பராபரமே. 107.

வானாதி நீயெனவே வைத்தமறை என்னையும்நீ
தானாகச் சொல்லாதோ சாற்றாய் பராபரமே. 108.

வெள்ளக் கருணைமத வேழமாம் நின்னருட்கென்
கள்ளக் கருத்தே கவளம் பராபரமே. 109.

வண்டாய்த் துவண்டு மவுன மலரணைமேல்
கொண்டார்க்கோ இன்பங் கொடுப்பாய் பராபரமே. 110.

மாயைமுத லாம்வினைநீ மன்னுயிர்நீ மன்னுயிர்தேர்ந்
தாயும்அறி வானதுநீ அன்றோ பராபரமே. 111.

என்னறிவும் யானும்என தென்பதுவு மாம்இவைகள்
நின்னவையே அன்றோ நிகழ்த்தாய் பராபரமே. 112.

பாரறியா தண்டப் பரப்பறியா துன்பெருமை
யாரறிவார் நானோ அறிவேன் பராபரமே. 113.

அண்டம் அனைத்திலுமாய் அப்பாலுக் கப்பாலுங்
கொண்டநின்னை யாரறிந்து கொள்வார் பராபரமே. 114.

ஒப்புயர்வொன் றின்றி ஒலிபுகா மோனவட்டக்
கப்பலுக்காம் வான்பொருள்நீ கண்டாய் பராபரமே. 115.

என்போல் எளியவரும் எங்கெங்கும் பார்த்தாலும்
உன்போல் வலியவரும் உண்டோ பராபரமே. 116.

பார்க்கின்அண்ட பிண்டப் பரப்பனைத்தும் நின்செயலே
யார்க்குஞ் செயலிலையே ஐயா பராபரமே. 117.

ஒன்றே பலவே உருவே அருவேயோ
என்றே அழைப்பதுன்னை என்றோ பராபரமே. 118.

செப்புவதெல் லாஞ்செபம்நான் சிந்திப்ப தெல்லாம்நின்
ஒப்பில் தியானமென ஓர்ந்தேன் பராபரமே. 119.

ஆரிருந்தேன் ஆர்போய்என் ஆரமுதாம் நின்னருளின்
சீரிருந்தால் உய்வேன் சிவமே பராபரமே. 120.

வஞ்சநமன் வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும்
அஞ்சி உனையடைந்தேன் ஐயா பராபரமே. 121.

எந்தப் படியுன் இதயம் இருந்ததெமக்
கந்தப் படிவருவ தன்றோ பராபரமே. 122.

எந்தெந்த நாளும் எனைப்பிரியா தென்னுயிராய்ச்
சிந்தைகுடி கொண்டஅருள் தேவே பராபரமே. 123.

அஞ்சல் அஞ்சல் என்றடிமைக் கப்போதைக் கப்போதே
நெஞ்சில் உணர்த்தும் நிறைவே பராபரமே. 124.

என்னையுன்றன் கைக்களித்தார் யாவரென்னை யான்கொடுத்துப்
பின்னை யுன்னாற் பெற்றநலம் பேசேன் பராபரமே. 125.

வாய்பேசா யூமையென வைக்கவென்றோ நீமவுனத்
தாயாக வந்தருளைத் தந்தாய் பராபரமே. 126.

தன்னைத்தந் தென்னைத் தடுத்தாண்ட நின்கருணைக்
கென்னைக்கொண் டென்னபலன் எந்தாய் பராபரமே.127.

மார்க்கண்டர்க் காக மறலிபட்ட பாட்டைஉன்னிப்
பார்க்கின்அன் பர்க்கென்ன பயங்காண் பராபரமே.128.

சுட்டியுண ராமல் துரியநிலை யாய்வெளியில்
விட்டநின்னை யானோ வியப்பேன் பராபரமே.129.

சூதொன்று மின்றியென்னைச் சும்மா இருக்கவைத்தாய்
ஈதொன்றும் போதாதோ இன்பம் பராபரமே.130.

வாயொன்றும் பேசா மவுனியாய் வந்தாண்ட
தேயொன்றும் போதாதோ இன்பம் பராபரமே. 131.

என்று மிருந்தபடிக் கென்னை யெனக்களித்த
தொன்றும்போ தாதோ உரையாய் பராபரமே. 132.

எண்திசைக்கீழ் மேலான எல்லாம் பெருவெளியாக்
கண்டவிடத் தென்னையும்நான் கண்டேன் பராபரமே.133.

பித்தனையே தும்மறியாப் பேதையனை ஆண்டவுனக்
கெத்தனைதான் தெண்ட னிடுவேன் பராபரமே.134.

தாயர்கர்ப்பத் தூடன்னமுந் தண்ணீருந் தந்தருளும்
நேயவுனை யாரோ நினையார் பராபரமே.135.

விரிந்த மனமொடுங்கும் வேளையில்நா னாகப்
பரந்தஅருள் வாழி பதியே பராபரமே.136.

சிந்தனைபோய் நானெனல்போய்த் தேக்கஇன்ப மாமழையை
வந்து பொழிந்தனைநீ வாழி பராபரமே.137.

தந்தேனே ஓர்வசனந் தந்தபடிக் கின்பமுமாய்
வந்தேனே யென்றனைநீ வாழி பராபரமே.138.

மண்ணும்விண்ணும் வந்து வணங்காவோ நின்னருளைக்
கண்ணுறவுட் கண்டவரைக் கண்டாற் பராபரமே.139.

என்றுங் கருணைபெற்ற இன்பத் தபோதனர்சொல்
சென்றசென்ற திக்கனைத்துஞ் செல்லும் பராபரமே.140.

ஆடுவதும் பாடுவதும் ஆனந்த மாகிநின்னைத்
தேடுவதும் நின்னடியார் செய்கை பராபரமே.141.

பொங்கியநின் தண்ணருளைப் புட்கலமாப் பெற்றவர்கட்
கெங்கெழுந்தென் ஞாயி றியம்பாய் பராபரமே.142.

பாலரொடு பேயர்பித்தர் பான்மையென நிற்பதுவே
சீலமிகு ஞானியர்தஞ் செய்கை பராபரமே.143.

உண்டுடுத்துப் பூண்டிங் குலகத்தார் போல்திரியுந்
தொண்டர்விளை யாட்டே சுகங்காண் பராபரமே.144.

கங்குல்பக லற்றதிருக் காட்சியர்கள் கண்டவழி
எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே.145.

காயநிலை அல்லவென்று காண்பார் உறங்குவரோ
தூயஅருட் பற்றாத் தொடர்வார் பராபரமே.146.

அப்பும்உப்பும் போன்ற அயிக்யபரா னந்தர்தமக்
கொப்புவமை சொல்லவும்வாய் உண்டோ பராபரமே.147.

சித்தந் தெளிந்து சிவமானோ ரெல்லோர்க்குங்
கொத்தடிமை யான குடிநான் பராபரமே.148.

தம்முயிர்போல் எவ்வுயிருந் தானென்று தண்ணருள்கூர்
செம்மையருக் கேவலென்று செய்வேன் பராபரமே.149.

விண்ணுக்கும் விண்ணாகி மேவும்உனக் கியான்பூசை
பண்ணிநிற்கு மாறு பகராய் பராபரமே.150.

நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம்அன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே.151.

கெட்டவழி ஆணவப்பேய் கீழாக மேலான
சிட்டருனைப் பூசை செய்வார் பராபரமே.152.

கால்பிடித்து மூலக் கனலைமதி மண்டலத்தின்
மேலெழுப்பில் தேகம் விழுமோ பராபரமே.153.

பஞ்சசுத்தி செய்துநின்னைப் பாவித்துப் பூசைசெய்தால்
விஞ்சிய ஞானம் விளங்கும் பராபரமே.154.

அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானேவந் தெய்வதும் பராபரமே.155.

மூர்த்திதலந் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்
வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே.156.

விரும்புஞ் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே.157.

தானந் தவந்தருமஞ் சந்ததமுஞ் செய்வர்சிவ
ஞானந் தனையணைய நல்லோர் பராபரமே.158.

சொன்னத்தைச் சொல்லித் துடிக்கின்ற ஆணவப்பேய்க்
கின்னல் வருவதெந்நாள் எந்தாய் பராபரமே.159.

இன்றே இருவினைவந் தேறியது நானென்றோ
அன்றே விளைந்ததன்றோ ஆற்றேன் பராபரமே.160.

எண்ணமுந்தான் நின்னைவிட இல்லையென்றால் யான்முனமே
பண்ணவினை யேது பகராய் பராபரமே.161.

என்னைஇன்ன தென்றறியா ஏழைக்கும் ஆகெடுவேன்
முன்னைவினை கூடல் முறையோ பராபரமே.162.

அறியாநான் செய்வினையை ஐயாநீ கூட்டுங்
குறியே தெனக்குளவு கூறாய் பராபரமே.163.

என்னைக் கெடுக்க இசைந்த இருவினைநோய்
தன்னைக் கெடுக்கத் தகாதோ பராபரமே.164.

வல்லமையே காட்டுகின்ற மாமாயை நானொருவன்
இல்லையெனின் எங்கே இருக்கும் பராபரமே.165.

முக்குணத்தால் எல்லாம் முளைக்கப் பிரகிருதிக்
கிக்குணத்தை நல்கியதார் எந்தாய் பராபரமே.166.

ஆற்றப் படாதுதுன்பம் ஐயஎன்னால் என்மனது
தேற்றப் படாதினிஎன் செய்வேன் பராபரமே.167.

பூராய மாய்மனதைப் போக்கஅறி யாமல்ஐயோ
ஆராய் அலைந்தேன் அரசே பராபரமே.168.

சினமிறக்கக் கற்றாலுஞ் சித்தியெல்லாம் பெற்றாலும்
மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே.169.

வாதுக்கு வந்தெதிர்த்த மல்லரைப்போல் பாழ்த்தமனம்
ஏதுக்குக் கூத்தாடு தெந்தாய் பராபரமே.170.

சூதாடு வார்போல் துவண்டு துவண்டுமனம்
வாதாடின் என்னபலன் வாய்க்கும் பராபரமே.171.

கொள்ளித்தேள் கொட்டிக் குதிக்கின்ற பேய்க்குரங்காய்க்
கள்ளமனந் துள்ளுவதென் கண்டோ பராபரமே.172.

வந்ததையும் போனவையும் வைத்துவைத்துப் பார்த்திருந்தால்
சிந்தை இதமகிதம் சேரும் பராபரமே.173.

ஏறுமயிர்ப் பாலம்உணர் விந்தவிட யங்கள்நெருப்
பாறெனவும் நன்றாய் அறிந்தேன் பராபரமே.174.

பொறிவழியே ஏழை பொறியாய் உழல்வதுநின்
அறிவின் விதித்தவிதி ஆமோ பராபரமே. 175.

பாசசா லங்கள்எலாம் பற்றுவிட ஞானவைவாள்
வீசுநாள் எந்நாள் விளம்பாய் பராபரமே.176.

எந்தவுட லேனும் எடுத்தவுடல் நல்லதென்று
சிந்தைசெய வந்ததிறஞ் செப்பாய் பராபரமே.177.

பொய்யெல்லாம் ஒன்றாய்ப் பொருத்திவைத்த பொய்யுடலை
மெய்யென்றான் மெய்யாய் விடுமோ பராபரமே.178.

மின்னனைய பொய்யுடலை மெய்யென்று நம்பிஐயோ
நின்னை மறக்கை நெறியோ பராபரமே.179.

நித்தியமொன் றில்லாத நீர்க்குமிழி போன்றவுடற்
கித்தனைதான் துன்பமுண்டோ என்னே பராபரமே.180.

தேகம்இறும் என்றுசடர் தேம்புவதென் நித்திரையில்
ஊகமறிந் தாற்பயந்தான் உண்டோ பராபரமே.181.

ஏதைச் சுமையா எடுப்பார் எடுத்தவுடல்
சேதமுறின் யாதுபின்னே செல்லும் பராபரமே.182.

தோற்பாவை நாலாட் சுமையாகுஞ் சீவனொன்றிங்
கார்ப்பால் எடுத்ததெவ ராலே பராபரமே.183.

ஞாலத்தை மெய்யெனவே நம்பிநம்ப நாளுமென்றன்
காலத்தைப் போக்கியென்ன கண்டேன் பராபரமே.184.

பொய்யுலக வாழ்க்கைப் புலைச்சேரி வாதனைநின்
மெய்யருளின் மூழ்கின் விடுங்காண் பராபரமே.185.

நூலேணி விண்ணேற நூற்குப் பருத்திவைப்பார்
போலே கருவிநன்னூற் போதம் பராபரமே.186.

சின்னஞ் சிறியார்கள் செய்தமணற் சோற்றையொக்கும்
மன்னுங் கலைஞான மார்க்கம் பராபரமே.187.

வாசகஞா னத்தால் வருமோ சுகம்பாழ்த்த
பூசலென்று போமோ புகலாய் பராபரமே.188.

கேட்டதையே சொல்லுங் கிளிபோல நின்னருளின்
நாட்டமின்றி வாய்பேசல் நன்றோ பராபரமே.189.

வெளியாய் அருளில் விரவும்அன்பர் தேகம்
ஒளியாய்ப் பிறங்கியதும் உண்டோ பராபரமே.190.

காலமொரு மூன்றுங் கருத்திலுணர்ந் தாலும்அதை
ஞாலந் தனக்குரையார் நல்லோர் பராபரமே.191.

கொல்லா விரதமொன்று கொண்டவரே நல்லோர்மற்
றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே.192.

இல்லாத காரியத்தை இச்சித்துச் சிந்தைவழிச்
செல்லாமை நல்லோர் திறங்காண் பராபரமே.193.

ஏதுவந்தும் ஏதொழிந்தும் என்னதுயான் என்னார்கள்
போதநிலை கண்ட புலத்தோர் பராபரமே.194.

ஆயிரஞ்சொன் னாலும் அறியாதவஞ்சநெஞ்சப்
பேயரொடு கூடிற் பிழை காண் பராபரமே.195.

மாய மயக்கொழிந்தார் மற்றொன்றை நாடுவரோ
நேய அருள்நிலையில் நிற்பார் பராபரமே.196.

நித்திரையிற் செத்தபிணம் நேருமுடற் கிச்சைவையாச்
சுத்தர்களே நல்ல துறவோர் பராபரமே.197.

எந்நெஞ்ச மேனும் இரங்குமே நின்னருட்குக்
கன்னெஞ் சரும்உளரோ காட்டாய் பராபரமே.198.

மந்தஅறி வாகியின்பம் வாயா திருந்தலைந்தால்
சிந்தைமயங் காதோஎன் செய்வேன் பராபரமே.199.

தேடினேன் திக்கனைத்துந் தெண்டனிட்டேன் சிந்தைநைந்து
வாடினேன் என்மயக்கம் மாற்றாய் பராபரமே.200.

மடிமையெனும் ஒன்றை மறுத்தன்றோ என்னை
அடிமைகொளல் வேண்டும் அரசே பராபரமே.201.

காலர்பயந் தீரஇன்பக் காற்கபய மென்றெழுந்த
மாலை வளர்த்தனையே வாழி பராபரமே.202.

நீர்ப்புற் புதமாய் நினைவருட்கே நின்றழியப்
பார்ப்பதல்லால் வேறுமொன்றைப் பாரேன் பராபரமே.203.

நீர்க்குமிழி போலென் நினைவுவெளி யாக்கரையப்
பார்க்குமிடம் எல்லாம்என் பார்வை பராபரமே.204.

ஆடிஓய் பம்பரம்போல் ஆசையுடன் எங்கும்உனைத்
தேடிஓய் கின்றேன்என் செய்வேன் பராபரமே.205.

வேதாந்தஞ் சித்தாந்தம் வேறென்னார் கண்களிக்கும்
நாதாந்த மோன நலமே பராபரமே.206.

ஆனந்த மானநின்னை அன்றியொன்றை உன்னாத
மோனந் தமியேற்கு முத்தி பராபரமே.207.

ஏதுக்கும் உன்னைவிட இல்லையென்றால் என்கருத்தைச்
சோதிக்க வேண்டாநான் சொன்னேன் பராபரமே.208.

முத்தியிலுந் தேகமிசை மூவிதமாஞ் சித்திபெற்றார்
எத்தனைபேர் என்றுரைப்ப தெந்தாய் பராபரமே.209.

நீயன்றி நானார் நினைவார்என் நெஞ்சகமார்
தாயன்றிச் சூலுமுண்டோ சாற்றாய் பராபரமே.210.

அங்கமே நின்வடிவ மானசுகர் கூப்பிடநீ
எங்கும்ஏன் ஏனென்ற தென்னே பராபரமே.211.

கொள்ளைவெள்ளத் தண்ணருள்மேற் கொண்டுகழித் தார்த்திழுத்தால்
கள்ளமனக் கப்பலெங்கே காணும் பராபரமே.212.

எக்கலையுங் கற்றுணர்ந்தோ மென்றவர்க்குஞ் சம்மதஞ்சொல்
வக்கணையால் இன்பம் வருமோ பராபரமே.213.

கல்லெறியப் பாசி கலைந்துநன்னீர் காணும்நல்லோர்
சொல்லுணரின் ஞானம்வந்து தோன்றும் பராபரமே.214.

நின்னை யுணர்ந் தோர்கடமை நிந்தித்த பேயறிஞர்
என்ன கதிபெறுவார் எந்தாய் பராபரமே.215.

என்னதுயான் என்னல்அற்றோர் எங்கிருந்து பார்க்கினும்நின்
சன்னிதியாம் நீபெரியசாமி பராபரமே.216.

சோற்றுத் துருத்திச் சுமைசுமப்பக் கண்பிதுங்கக்
காற்றைப் பிடித்தலைந்தேன் கண்டாய் பராபரமே.217.

உள்ளபடி யொன்றை உரைக்கின்அவர்க் குள்ளுறவாய்க்
கள்ளமின்றி அன்பாய்க் களிப்பேன் பராபரமே.218.

அடுத்தஇயல் பாகவொன்றை யான்பகர்வ தல்லால்
தொடுத்ததொன்றை யான்வேண்டிச் சொல்லேன் பராபரமே.219.

உள்ளமறி யாதொருவர் ஒன்றைஉன்னிப் பேசில்ஐயோ
துள்ளியிளங் கன்றாய்த் துடிப்பேன் பராபரமே.220.

எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே.221.

முன்னாள்மெய்ஞ் ஞான முனிவர்தவம் ஈட்டுதல்போல்
இந்நாளிற் காணஎனக் கிச்சை பராபரமே.222.

கன்மமென்ப தெல்லாங் கரிசறவே மெய்ஞ்ஞான
தன்மநிலை சார்ந்ததன்பர் தன்மை பராபரமே.223.

கண்துயிலா தென்னறிவின் கண்ணூடே காட்சிபெற
மண்டிய பேரொளிநீ வாழி பராபரமே.224.

நானான தன்மையென்று நாடாமல் நாடஇன்ப
வானாகி நின்றனைநீ வாழி பராபரமே.225.

அகத்தூ டணுவணுவாய் அண்டமெல்லாந் தானாய்
மகத்தாகி நின்றனைநீ வாழி பராபரமே.226.

காரகமாங் கர்ப்பஅறைக் கண்ணூடும் என்கண்ணே
வாரம்வைத்துக் காத்தனைநீ வாழி பராபரமே.227.

புரந்தோர்தந் தேசமென்பார் பூமியைப்போ ராடி
இறந்தோருந் தம்மதென்பார் என்னே பராபரமே.228.

மூர்த்தியெல்லாம் வாழியெங்கள் மோனகுரு வாழிஅருள்
வார்த்தையென்றும் வாழிஅன்பர் வாழி பராபரமே.229.

சொல்லும் பொருளுந் தொடரா அருள்நிறைவில்
செல்லும் படிக்கருள்நீ செய்தாய் பராபரமே.230.

இற்றைவரைக் குள்ளாக எண்ணரிய சித்திமுத்தி
பெற்றவர்கள் எத்தனைபேர் பேசாய் பராபரமே.231.

நாடும் நகரும்நிசா னாட்டிய பாளயமும்
ஈடுசெயு மோமுடிவில் எந்தாய் பராபரமே.232.

தேடுந் திரவியமுஞ் சேர்ந்தமணிப் பெட்டகமும்
கூட வருந்துணையோ கூறாய் பராபரமே.233.

தேடாத தேட்டினரே செங்கைத் துலாக்கோல்போல்
வாடாச் சமனிலையில் வாழ்வார் பராபரமே.234.

நீராய்க் கசிந்துருகி நெட்டுயிர்த்து நின்றேனைப்
பாராத தென்னோ பகராய் பராபரமே.235.

உள்ளபொருள் ஆவி உடல்மூன்றும் அன்றேதான்
கொள்ளைகொண்ட நீயென் குறைதீர் பராபரமே.236.

ஆழ்ந்தாயே யிவ்வுலகில் அல்லலெல்லாந் தீர்ந்தருளால்
வாழ்ந்தாயே என்றனைநீ வாழி பராபரமே.237.

தாரா அருளையெல்லாந் தந்தெனையும் நின்னருளின்
வாராயோ என்றனைநீ வாழி பராபரமே.238.

ஆசையுன்மீ தல்லால் அருளறிய வேறுமொன்றில்
பாசம்வையேன் நின்கருணைப் பாங்காற் பராபரமே.239

ஆதியந்த நீகுருவாய் ஆண்டதல்லால் நின்னையன்றிப்
போதனையும் உண்டோ புகலாய் பராபரமே.240.

தானாக வந்து தடுத்தாண் டெனையின்ப
வானாகச் செய்தஇன்ப வானே பராபரமே.241.

பற்றற் றிருக்குநெறி பற்றிற் கடல்மலையுஞ்
சுற்ற நினைக்குமனஞ் சொன்னேன் பராபரமே.242.

படிப்பற்றுக் கேள்வியற்றுப் பற்றற்றுச் சிந்தைத்
துடிப்பற்றார்க் கன்றோ சுகங்காண் பராபரமே.243.

சத்தாகி நின்றோர் சடங்க ளிலிங்கமென
வைத்தாரும் உண்டோயென் வாழ்வே பராபரமே.244.

சித்த நிருவிகற்பஞ் சேர்ந்தார் உடல்தீபம்
வைத்தகர்ப்பூ ரம்போல் வயங்கும் பராபரமே.245.

ஆதிகா லத்தில்எனை ஆண்டனையே இப்பால்நீ
போதியெனில் எங்கேநான் போவேன் பராபரமே.246.

நாவழுத்துஞ் சொல்மலரோ நாளுதிக்கும் பொன்மலரோ
தேவையுனக் கின்னதென்று செப்பாய் பராபரமே.247.

கன்னல்தரும் பாகாய்க் கருப்புவட்டாய்க் கற்கண்டாய்
இன்னமுதாய் என்னுள் எருந்தாய் பராபரமே.248.

சிற்பரமே தற்பரமே தெய்வச் சுருதிசொன்ன
அற்புதமே அன்பே அறிவே பராபரமே.249.

அறிவிப்பான் நீயென்றால் ஐம்புலன்க டந்தந்
நெறிநிற்பார் யாரே நிகழ்த்தாய் பராபரமே.250.

அந்தக் கரணமெனும் ஆகாத பேய்கள்எனை
வந்துபிடித் தாட்ட வழக்கோ பராபரமே.251.

ஐவரொடுங் கூடாமல் அந்தரங்க சேவைதந்த
தெய்வ அறிவே சிவமே பராபரமே.252.

அருளாகி நின்றசுகம் ஆகாமல் ஐயோ
இருளாகி நிற்க இயல்போ பராபரமே.253.

அன்பரெல்லாம் இன்பம் அருந்திடவும் யான்ஒருவன்
துன்புறுதல் நன்றோநீ சொல்லாய் பராபரமே.254.

சந்ததமும் நின்கருணை சாற்றுவதல் லால்வேறு
சிந்தைஅறி யேன்உன்றன் சித்தம் பராபரமே.255.

நான்நான் எனக்குளறும் நாட்டத்தால் என்னைவிட்டுப்
போனாலும் உன்னைவிட்டுப் போகேன் பராபரமே.256.

இக்காயம் பொய்யென்றோர் ஈட்டத் துனக்கபயம்
புக்காதார் உண்டோ புகலாய் பராபரமே.257.

தானாதல் பூரணமே சாருமிடம் உண்டுயிரும்
வானாதி யும்ஒழுங்காய் மன்னும் பராபரமே.258.

உன்னுமனங் கர்ப்பூர வுண்டைபோ லேகரைய
மின்னும்ஆ னந்த விளக்கே பராபரமே.259.

நாட்பட் டலைந்த நடுக்கமெலாந் தீரவுனக்
காட்பட்டுந் துன்பம்எனக் காமோ பராபரமே.260.

பாவிபடுங் கண்கலக்கம் பார்த்துமிரங் காதிருந்தால்
ஆவிக் குறுதுணையார் ஐயா பராபரமே.261.

நின்னிறைவே தாரகமாய் நின்றுசுகம் எய்தாமல்
என்னிறைவே பாவித்தேன் என்னே பராபரமே.262.

நின்னைச் சரண்புகுந்தால் நீகாக்கல் வேண்டுமல்லால்
என்னைப் புறம்விடுதல் என்னே பராபரமே.263.

மாறாத துன்பமெல்லாம் வந்துரைத்தால் நின்செவியில்
ஏறாத வாறேது இயம்பாய் பராபரமே.264.

விஞ்சுபுலப் பாடனைத்தும் வீறுதுன்பஞ் செய்யவந்த
அஞ்சுபுல வேடருக்கும் ஆற்றேன் பராபரமே.265.

கன்னங் கரியநிறக் காமாதி ராட்சசப் பேய்க்
கென்னையிலக் காகவைத்த தென்னே பராபரமே.266.

சித்திநெறி கேட்டல் செகமயக்கஞ் சன்மமற
முத்திநெறி கேட்டல் முறைகாண் பராபரமே.267.

சிந்தை சிதையச் சிதையாத ஆனந்தம்
எந்தவகை யாலேவந் தெய்தும் பராபரமே.268.

கூர்த்தஅறி வால்அறியக் கூடா தெனக்குரவன்
தேர்த்தபடி தானே திரிந்தேன் பராபரமே.269.

பத்த ரருந்தும் பரமசுகம் யானருந்த
எத்தனைநாள் செல்லும் இயம்பாய் பராபரமே.270.

தீர்த்தி னால்துறவு சேராமல் இவ்வுலகில்
பாரத் தனம்பேசல் பண்போ பராபரமே.271.

இந்த வெளியினையுண் டேப்பமிடப் பேரறிவாத்
தந்தவெளிக் கேவெளியாய்ச் சார்ந்தேன் பராபரமே.272.

உணர்த்தும்உனை நாடா துணர்ந்தவையே நாடி
இணக்குறுமென் ஏழைமைதான் என்னே பராபரமே.273.

உண்டுபோல் இன்றாம் உலகைத் திரமெனவுள்
கொண்டுநான் பெற்றபலன் கூறாய் பராபரமே.274.

உள்ளபடி யாதுமென உற்றுணர்ந்தேன் அக்கணமே
கள்ளமனம் போனவழி காணேன் பராபரமே.275.

சித்த மவுனஞ் செயல்வாக் கெலாமவுனஞ்
சுத்த மவுனம்என்பால் தோன்றிற் பராபரமே.276.

எண்ணில்பல கோடிஉயிர் எத்தனையோ அத்தனைக்குங்
கண்ணிற் கலந்தஅருட் கண்ணே பராபரமே.277.

எனக்கினியார் உன்போலும் இல்லையென்றால் யானும்
உனக்கினியா னாகா உளவேன் பராபரமே.278.

அண்டபிண்டங் காணேன் அகமும் புறமும் ஒன்றாக்
கண்ட என்னை நீகலந்த காலம் பராபரமே.279.

எத்தனையோ கோடி யெடுத்தெடுத்துச் சொன்னாலுஞ்
சித்தம் இரங்கிலைஎன் செய்வேன் பராபரமே.280.

அன்றந்த நால்வருக்கும் அற்புதமாய் நீயுரைத்த
தொன்றந்த வார்த்தையெனக் குண்டோ பராபரமே.281.

அப்பனென்றும் அன்னையென்றும் ஆரியனென் றும்உனையே
செப்புவதும் உன்னிலையின் சீர்காண் பராபரமே.282.

கட்டுங் கனமும்அந்தக் காலர்வரும் போதெதிர்த்து
வெட்டுந் தளமோ விளம்பாய் பராபரமே.283.

பேசாத மோனநிலை பெற்றன்றோ நின்னருளாம்
வாசாம கோசரந்தான் வாய்க்கும் பராபரமே.284

கற்றாலுங் கேட்டாலுங் காயமழி யாதசித்தி
பெற்றாலும் இன்பம்உண்டோ பேசாய் பராபரமே.285.

கண்டவடி வெல்லாங் கரைக்கின்ற அஞ்சனம்போல்
அண்டமெல்லாம் நின்னருளே அன்றோ பராபரமே.286.

தன்செயலால் ஒன்றுமிலை தானென்றால் நான்பாவி
நின்செயலாய் நில்லா நினைவேன் பராபரமே.287.

கொலைகளவு கட்காமங் கோபம்விட்டால் அன்றோ
மலையிலக்கா நின்னருள்நான் வாய்க்கும் பராபரமே.288.

தன்னைஅறி யாதுசகந் தானாய் இருந்துவிட்டால்
உன்னை அறியஅருள் உண்டோ பராபரமே.289.

ஒன்றிரண்டென் றுன்னா உணர்வுகொடுத் துள்ளபடி
என்றும்என்னை வையாய் இறையே பராபரமே.290.

கருதும்அடி யார்கள்உளங் காணவெளி யாகுந்
துரியநிறை வான சுகமே பராபரமே.291.

பொய்குவித்த நெஞ்சன்அருட் பொற்பறிந்து திக்கனைத்துங்
கைகுவித்து நிற்பதெந்தக் காலம் பராபரமே.292.

அத்துவித மான அயிக்ய அனுபவமே
சுத்தநிலை அந்நிலையார் சொல்வார் பராபரமே.293.

வைத்த சுவரலம்பின் மண்போமோ மாயையினோர்க்
கெத்தனைபோ தித்தும்என்னாம் எந்தாய் பராபரமே.294.

பூட்டற்றுத் தேகமற்றுப் போகுமுன்னே நின்னருளைக்
காட்டாத் தகாதோஎன் கண்ணே பராபரமே.295.

சொல்லிற் பதர்களைந்து சொல்முடிவு காணாதார்
நெல்லிற் பதர்போல் நிற்பார் பராபரமே.296.

அழுக்காற்றால் நெஞ்சம் அழுங்கியபுன் மாக்கள்
இழுக்காற்றால் இன்பநலம் எய்தார் பராபரமே.297.

தேகாதி பொய்யெனவே தேர்ந்தவுப சாந்தருக்கு
மோகாதி உண்டோ மொழியாய் பராபரமே.298.

சாதனையெல் லாம்அவிழத் தற்போதங் காட்டாதோர்
போதனைநீ நல்குவதெப் போதோ பராபரமே.299.

ஒன்றுமறி யாவிருளாம் உள்ளம் படைத்தஎனக்
கென்று கதிவருவ தெந்தாய் பராபரமே.300.

சிந்திக்குந் தோறும்என்னுள் சிற்சுகமாய் ஊற்றூறிப்
புந்திக்குள் நின்றஅருள் பொற்பே பராபரமே.301.

என்றும்அடைந் தோர்கட் கிரங்கார் குறிப்பனைத்துங்
கன்றையுதை காலி கதைகாண் பராபரமே.302.

குற்றங் குறையக் குணமே லிடஅருளை
உற்றவரே ஆவிக் குறவாம் பராபரமே.303.

ஓருரையால் வாய்க்குமுண்மைக் கோரனந்த நூல்கோடிப்
பேருரையாற் பேசில்என்ன பேறாம் பராபரமே.304.

சொல்லுஞ் சமயநெறிச் சுற்றுக்கு ளேசுழலும்
அல்லல் ஒழிவதென்றைக் கையா பராபரமே.305.

பிடித்ததையே தாபிக்கும் பேராணவத்தை
அடித்துத் துரத்தவல்லார் ஆர்காண் பராபரமே.306.

நேசத்தால் நின்னை நினைக்கும் நினைவுடையார்
ஆசைக் கடலில் அழுந்தார் பராபரமே.307.

கள்ளாது கட்டுணவுங் காரியமோ நானொருசொல்
கொள்ளாத தோடமன்றோ கூறாய் பராபரமே.308.

சென்றவிட மெல்லாந் திருவருளே தாரகமாய்
நின்றவர்க்கே ஆனந்த நிட்டை பராபரமே.309.

நீட்சி குறுகல்இல்லா நித்யசுகா ரம்பசக
சாட்சியாம் உன்னைவந்து சார்ந்தேன் பராபரமே.310.

வானாதி தத்துவமாய் மன்னிநின்ற காரணநீ
நானாகி நிற்பதெந்த நாளோ பராபரமே.311.

காட்டத்தில் அங்கி கடையவந்தால் என்னவுன்னும்
நாட்டத்தின் ஊடுவந்த நட்பே பராபரமே.312.

நித்திரையாய்த் தானே நினைவயர்ந்தால் நித்தநித்தஞ்
செத்தபிழைப் பானதெங்கள் செய்கை பராபரமே.313.

இன்பநிட்டை எய்தாமல் யாதெனினுஞ் சென்றுமனந்
துன்புறுதல் வன்பிறவித் துக்கம் பராபரமே.314.

பொய்யகல மெய்யான போதநிலை கண்டோர்க்கோர்
ஐயமிலை ஐயமிலை ஐயா பராபரமே.315.

மந்திரத்தை உன்னி மயங்கா தெனக்கினியோர்
தந்திரத்தை வைக்கத் தகாதோ பராபரமே.316.

விண்கருணை பூத்ததென்ன மேவி உயிர்க்குயிராய்த்
தண்கருணை தோன்றஅருள் தாய்நீ பராபரமே.317.

தன்மயமாய் நின்றநிலை தானேதா னாகிநின்றால்
நின்மயமாய் எல்லாம் நிகழும் பராபரமே.318.

ஏங்கி இடையும்நெஞ்சம் ஏழையைநீ வாவென்றே
பாங்குபெறச் செய்வதுன்மேற் பாரம் பராபரமே.319.

ஆண்டநின்னை நீங்கா அடிமைகள்யாம் ஆணவத்தைப்
பூண்டதென்ன கன்மம் புகலாய் பராபரமே.320.

எங்கணும்நீ யென்றால் இருந்துபடி எய்தாமல்
அங்குமிங்கும் என்றலையல் ஆமோ பராபரமே.321.

கற்குமது வுண்டு களித்ததல்லால் நின்னருளில்
நிற்குமது தந்ததுண்டோ நீதான் பராபரமே.322.

அண்டபகி ரண்டம் அறியாத நின்வடிவைக்
கண்டவரைக் கண்டாற் கதியாம் பராபரமே.323.

கலக்கமுற நெஞ்சைக் கலக்கித் திரும்பத்
துலக்குபவன் நீயலையோ சொல்லாய் பராபரமே.324.

சிந்தையும்என் போலச் செயலற் றடங்கிவிட்டால்
வந்ததெல்லாம் நின்செயலா வாழ்வேன் பராபரமே.325.

பந்தமெலாந் தீரப் பரஞ்சோதி நீகுருவாய்
வந்த வடிவை மறவேன் பராபரமே.326.

தானந்த மான சகச நிருவிகற்ப
ஆனந்த நிட்டைஅருள் ஐயா பராபரமே.327.

அல்லலெல்லாந் தீரஎனக் கானந்த மாகவொரு
சொல்லைஎன்பால் வைத்ததையென் சொல்வேன் பராபரமே.328.

சிந்தை மயக்கமறச் சின்மயமாய் நின்றவுன்னைத்
தந்தவுனக் கென்னையும்நான் தந்தேன் பராபரமே.329.

மைகாட்டு மாயை மயக்கமற நீகுருவாய்க்
கைகாட்ட வுங்கனவு கண்டேன் பராபரமே.330.

மால்வைத்த சிந்தை மயக்கறஎன் சென்னிமிசைக்
கால்வைக்க வுங்கனவு கண்டேன் பராபரமே.331.

மண்ணான மாயையெல்லாம் மாண்டுவெளி யாகஇரு
கண்ணார வுங்கனவு கண்டேன் பராபரமே.332.

மண்ணீர்மை யாலே மயங்காதுன் கையால்என்
கண்ணீர் துடைக்கவும்நான் கண்டேன் பராபரமே.333.

உள்ள துணரா வுணர்விலிமா பாவியென்றோ
மெள்ளமெள்ளக் கைநெகிழ விட்டாய் பராபரமே.334.

எல்லாம் நினதுசெயல் என்றெண்ணும் எண்ணமும்நீ
அல்லால் எனக்குளதோ ஐயா பராபரமே.335.

பந்த மயக்கிருக்கப் பற்றொழிந்தேன் என்றுளறும்
இந்த மயக்கம் எனக்கேன் பராபரமே.336.

காட்சியெல்லாங் கண்ணைவிடக் கண்டதுண்டோ யாதினுக்கும்
ஆட்சி உனதருளே அன்றோ பராபரமே.337.

எட்டுத் திசையும்ஒன்றாய் இன்பமாய் நின்றவுன்னை
விட்டுப் பிரியவிடம் வேறோ பராபரமே.338.

பிரியா துயிர்க்குயிராய்ப் பின்னமற வோங்குஞ்
செறிவே அறிவே சிவமே பராபரமே.339.

ஏதேது சொன்னாலும் எள்ளளவும் நீயிரங்காச்
சூதே தெனக்குளவு சொல்லாய் பராபரமே.340.

கற்பனையாப் பாடுகின்றேன் கண்ணீருங் கம்பலையுஞ்
சொற்பனத்துங் காணேன்என் சொல்வேன் பராபரமே.341.

வன்பொன்று நீங்கா மனதிறப்ப மாறாப்பேர்
அன்பொன்றும் போதும்எனக் கையா பராபரமே.342.

ஏதுந் தெரியா எளியேனை வாவெனநின்
போதநிலை காட்டிற் பொறாதோ பராபரமே.343.

ஓராமல் எல்லாம் ஒழிந்தேற்குன் தெய்வஅருள்
தாரா திருக்கத் தகுமோ பராபரமே.344.

மோனந் தருஞான மூட்டி எனக்குவட்டா
ஆனந்த வாழ்க்கை அருளாய் பராபரமே.345.

வாடுமுகங் கண்டென்னை வாடாம லேகாத்த
நீடுங் கருணை நிறைவே பராபரமே.346.

புந்தியினால் நின்னடியைப் போற்றுகின்ற மெய்யடியார்
சிந்தையிறப் போநின் தியானம் பராபரமே.347.

உனக்குவமை யாக்கருணை உள்ளவரும் வன்மைக்
கெனக்குவமை யானவரும் இல்லை பராபரமே.348.

தாயிருந்தும் பிள்ளை தளர்ந்தார்போல் எவ்விடத்தும்
நீயிருந்தும் நான் தளர்ந்து நின்றேன் பராபரமே.349.

வாயாற் கிணறுகெட்ட வாறேபோல் வாய்பேசிப்
பேயானார்க் கின்பமுண்டோ பேசாய் பராபரமே.350.

பாவமென்றால் ஏதும் பயமின்றிச் செய்யஇந்தச்
சீவனுக்கார் போதந் தெரித்தார் பராபரமே.351.

இன்ப நிருவிகற்பம் இன்றேதா அன்றெனிலோ
துன்பம் பொறுப்பரிது சொன்னேன் பராபரமே.352.

கற்குநிலை கற்றால் கருவியவி ழாதருளாய்
நிற்குநிலை கற்பதுவே நீதம் பராபரமே.353.

காச்சச் சுடர்விடும்பொற் கட்டிபோல் நின்மலமாய்ப்
பேச்சற் றவரே பிறவார் பராபரமே.354.

பற்றொழிந்து சிந்தைப் பதைப்பொழிந்து தானேதான்
அற்றிருப்ப தென்றைக் கமைப்பாய் பராபரமே.355.

உருவெளிதான் வாதவூர் உத்தமர்க்கல் லாலினமுங்
குருவழிநின் றார்க்குமுண்டோ கூறாய் பராபரமே.356.

தேகம்யா தேனுமொரு சித்திபெறச் சீவன்முத்தி
ஆகுநெறி நல்லநெறி ஐயா பராபரமே.357.

உலகநெறி போற்சடலம் ஓயஉயிர் முத்தி
இலகுமெனல் பந்த இயல்பே பராபரமே.358.

பரமாப் பரவெளியாப் பார்ப்பதல்லால் மற்றெவர்க்குந்
திரமேது மில்லைநன்றாய்த் தேர்ந்தேன் பராபரமே.359.

தேடுவேன் நின்னருளைத் தேடுமுன்னே யெய்தில்நடம்
ஆடுவேன் ஆனந்த மாவேன் பராபரமே.360.

உள்ளங் குழைய வுடல்குழைய வுள்ளிருந்த
கள்ளங் குழையஎன்று காண்பேன் பராபரமே.361.

பட்டப் பகல்போலப் பாழ்த்தசிந்தை மாளின்எல்லாம்
வெட்டவெளி யாக விளங்கும் பராபரமே.362.

பார்க்கின்அணுப் போற்கிடந்த பாழ்ஞ்சிந்தை மாளின்என்னை
யார்க்குச் சரியிடலாம் ஐயா பராபரமே.363.

பாட்டுக்கோ அன்பினுக்கோ பத்திக்கோ அன்பர்தங்கள்
நீட்டுக்கெல் லாங்குறுகி நின்றாய் பராபரமே.364.

முத்தாந்த வித்தே முளைக்குநில மாயெழுந்த
சித்தாந்த மார்க்கச் சிறப்பே பராபரமே.365.

உன்னா வெளியாய் உறங்காத பேருணர்வாய்
என்னாவிக் குள்ளே யிருந்தாய் பராபரமே.366.

தத்துவமெல் லாமகன்ற தன்மையர்க்குச் சின்மயமா
நித்தமுத்த சுத்த நிறைவே பராபரமே.367.

உள்ளக் கொதிப்பகல வுள்ளுள்ளே ஆனந்த
வெள்ள மலர்க்கருணை வேண்டும் பராபரமே.368.

என்னைப் புறப்பதரு ளின்கடனாம் என்கடனாம்
நின்னிற் பணியறவே நிற்கை பராபரமே.369.

தானேயா நன்னிலையைத் தந்தஅருள் ஆனந்த
வானே மனாதீத வாழ்வே பராபரமே.370.

மண்ணாதி பூதமெல்லாம் வைத்திருந்த நின்னிறைவைக்
கண்ணாரக் கண்டு களித்தேன் பராபரமே.371.

அறியாமை ஈதென் றறிவித்த அன்றேதான்
பிறியா அருள்நிலையும் பெற்றேன் பராபரமே.372.

தீதெனவும் நன்றெனவுந் தேர்ந்ததுநான் தேர்ந்தபடி
ஏதும் நடக்கவொட்டா தென்னே பராபரமே.373.

கண்ட அறிவகண்டா காரமென மெய்யறிவில்
கொண்டவர்க்கே முத்தி கொடுப்பாய் பராபரமே.374.

ஈறாக வல்வினைநான் என்னாமல் இன்பசுகப்
பேறாம் படிக்கடிமை பெற்றேன் பராபரமே.375.

பெற்றார் அநுபூதி பேசாத மோனநிலை
கற்றார் உனைப்பிரியார் கண்டாய் பராபரமே.376.

நீயேநான் என்று நினைப்பும் மறப்புமறத்
தாயே அனையஅருள் தந்தாய் பராபரமே.377.

சஞ்சலமற் றெல்லாம்நீ தானென் றுணர்ந்தேன்என்
அஞ்சலியுங் கொள்ளாய் அரசே பராபரமே.378.

பூதமுதல் நாதவரை பொய்யென்ற மெய்யரெல்லாங்
காதலித்த இன்பக் கடலே பராபரமே.379.

வாக்குமனம் ஒன்றுபட்ட வார்த்தையல்லால் வெவ்வேறாய்ப்
போக்குடைய வார்த்தை பொருந்தேன் பராபரமே.380.

வன்மையின்றி எல்லாம் மதித்துணர்வாய்க் காகெடுவேன்
தன்மையொன்றுந் தோயாத் தடையோ பராபரமே.381.

பத்தர்சித்தர் வாழிபரி பக்குவர்கள் வாழிசெங்கோல்
வைத்தவர்கள் வாழிகுரு வாழி பராபரமே.382.

கல்லாதேன் ஆனாலுங் கற்றுணர்ந்த மெய்யடியார்
சொல்லாலே நின்னைத் தொடர்ந்தேன் பராபரமே.383.

சொல்லிறப்பச் சற்குருவாய்த் தோன்றிச் சுகங்கொடுத்த
நல்லவர்க்கே கொத்தடிமை நான்காண் பராபரமே.384.

முத்திக்கு வித்தான மோனக் கரும்புவழி
தித்தித் திடவிளைந்த தேனே பராபரமே.385.

நித்திரையும் பாழ்த்த நினைவும்அற்று நிற்பதுவோ
சுத்த அருள்நிலைநீ சொல்லாய் பராபரமே.386.

மண்ணும் மறிகடலும் மற்றுளவும் எல்லாம்உன்
கண்ணில் இருக்கவும்நான் கண்டேன் பராபரமே.387.

பூட்டிவைத்து வஞ்சப் பொறிவழியே என்றனைநீ
ஆட்டுகின்ற தேதோ அறியேன் பராபரமே.388.

பொய்யுணர்வா யிந்தப் புழுக்கூட்டைக் காத்திருந்தேன்
உய்யும் வகையும் உளதோ பராபரமே.389.

No comments: