Saturday, June 15, 2013

உயிராகி மெய்யாகி, உயிர் மெய்யாகியத் தமிழ்!

உயிராகி மெய்யாகி, உயிர் மெய்யாகியத் தமிழ்!

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி. உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடும். இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

நம்மொழிக்குத் தமிழ் என்று எப்படிப் பொருள் வந்தது என்பதைக் காண்போம்.

க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.

உலக மாந்தன் முதன் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.
தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர். அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி த்+அ கூடி 'த' வாகவும், ம்+இ கூடி 'மி' யாகவும், ழ்+உ கூடி "ழு" வாகவும் என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி தமிழ் என்று அழைத்தனர். அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!

ஓர் எழுத்து ஒரு சொல் !

ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார்கள்.

ஈ, மை, நீ, கை, கோ, வா, பூ, போ, பை போன்ற ஒரெழுத்து ஒரு சொல்லை பேச்சு வழக்கில் நாம் பயன்ப்படுத்துவோம். ஆனால், தமிழில் நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது.

ஒரு எழுத்துச் சொல்லாகி தருகிற அர்த்தங்களோடு பார்ப்போம்.

ஆ - பசு
ஈ - பறவை
ஊ - இறைச்சி
ஏ - கணை
ஐ - தலைவன்
ஓ - வியப்பு
மா - பெரிய
மீ - மேல்
மூ - மூப்பு
மே - மேன்மை
மை - இருள்
மோ - மோதுதல்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - தூய்மை
தே - தெய்வம்
தை - மாதம்
சா - சாதல்
சீ - இலக்குமி
சே - எருது
சோ - மதில்
பா - பாட்டு
பூ - மலர்
பே - நுரை
பை - பசுமை
போ - செல்
நா - நாக்கு
நீ - முன்னால் இருப்பவர்
நே - அருள்
நை - இகழ்ச்சியை குறிப்பத்து
நோ - வலி
கா - பாதுகாப்பு
கூ - வெல்
கை - ஒப்பணை
கோ - அரசன்
வீ - மலர்
வை - வைக்கோல்
வௌ - கைப்பற்றுதல்
யா - கட்டுதல்
நொ - துன்பம்
து - உணவு

இந்த அனைத்து ஓர் எழுத்துச் சொற்களையும் கவனித்தீர்களானால் ஓர் ஆச்சர்யம் உங்களுக்குத் தெரியும். இவற்றில் நொ,து என்ற இரண்டு எழுத்துக்கள் மட்டும் தான் குறில் என்கிற குறைந்த கால அளவுடைய எழுத்துக்கள். மற்றவை எல்லாம் நீண்ட ஒலி அளவுடைய நெடில்கள் என்பதுதான் அந்த ஆச்சர்யம்

தமிழனின் வரலாறு என்னவென்று இதுவரை துல்லியமாக யாரும் சொல்லவில்லை. ஆங்கில மோகம் கொண்டு அலையும் இன்றைய மக்களுக்கு தன் தாய்மொழியின் அருமை அறவே மறந்துவிட்டது. தமிழ் மொழியின் தோற்றம் குறித்து எனக்கு தோன்றிய ஒரு சின்ன உதாரணம்.
திருக்குறள் – ஏன் என்றால், தமிழ் என்று சொன்ன உடனே நம்ம ஞாபகத்திற்கு வருவது அதுதானே.

திருக்குறள் கி.மு.31-ல் தமிழ்கடைசங்கத்தில்அரங்கேற்றபட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், நாம் யோசிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் கடைசங்கம் தான் தமிழின் கடைசிச் சங்கம். அந்தக் கடைசிச் சங்கத்தின் காலமே கி.மு.31 என்றால் இரண்டாம் மற்றும் முதல் சங்கம் எப்பொழுது தோன்றி இருக்கும்...?!

திருவள்ளுவர் தொல்காப்பிய இலக்கணபடி திருக்குறள் இயற்றியுள்ளார். ஆனால், தொல்காப்பியரோஅகத்திய இலக்கணத்தை தழுவி தனது இலக்கணத்தை இயற்றியுள்ளார். அப்படியென்றால் அகத்தியர் எப்பொழுது தனது இலக்கணத்தை இயற்றிருப்பர்..?! தமிழனின் இலக்கிய அறிவுக்கு இது ஒரு சான்று.

ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட மொழியில் நன்கு தேர்ந்த பிறகே இலக்கணத்தில் பழக முடியும், இவர்கள் இலக்கணத்தில் நன்கு பழகியவர் என்றால் அவர்கள் தமிழ் மொழியில் நன்கு பழகியிருக்க வேண்டும். அப்படி எனில் தமிழ் மொழி எப்பொழுது தோன்றி இருக்க வேண்டும் என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்.

இதில் இன்னும் முக்கியமானது என்னவெனில் தமிழ் மக்கள் எப்பொழுது தோன்றியிருப்பார்கள் என்பதே, ஏனெனில் ஒரு மக்கள் சமுதாயம் தான் மொழியை உருவாக்குவது. அவர்கள் மொழியை உருவாக்கியிருக்கின்றனர் என்றால் அவர்கள் தோன்றி பல ஆண்டுகள் கடந்து ஒரு நாகரீக முன்னேற்றம் அடைந்து அதன் பின்னரே மொழியை உருவாக்கியிருக் கின்றனர்.

நான் நெஞ்சை நிமிர்த்திச் சொல்வேன் தமிழன் என்று. !!

Monday, June 10, 2013

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பத்துக் கட்டளைகள்

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பத்துக் கட்டளைகள்.

*****

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி ஏதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்னி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.

குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). ஏதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.