Saturday, June 27, 2009

பணிதல்

[நண்பர் அனுப்பிய மினஞ்சலிலிருந்து]

மௌரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர் வீதிஉலா வந்துகொண்டிருக்கும் போது, எதிரில் ஒரு புத்த பிட்சு வருவதை பார்த்து, ரதத்தை விட்டு இறங்கி சென்று புத்த பிட்சுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தனது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார்.

இதைப் பார்த்த அமைச்சர், சங்கடப்பட்டு, "ஒரு மண்டலாதிபதி ஒரு பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பரிய கௌரவம் என்னாவது?" என்று மன்னரிடம் வினவினார்.

அசோகர் சிரித்தார். கேள்விக்கு பதிலளிக்காமல் ஒரு விசித்திர கட்டளையை பிறப்பித்தார்.

"ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலி தலை, ஒரு மனித தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்" என்று.

ஏவலர்கள் நாற்புறமும் பறந்தனர்.

ஆட்டு தலை கிடைக்க சிரமமே ஏற்படவில்லை. இறைச்சி கடையில் கிடைத்து விட்டது. புலி தலைக்கு அலைந்தார்கள். அதுவும் ஒரு வேட்டைக் காரனிடம் கிடைத்தது. மனித தலைக்கு எங்கே போவது? கடைசியில் சுடுகாட்டில் இருந்து ஒரு பிணத்தின் தலையை எடுத்து வந்தனர்.

மூன்றையும் பார்த்த அசோகர், தன அமைச்சர்களிடம் கட்டளையிட்டார். "சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்றுப் பொருள் கொண்டு வாருங்கள்."

ஆட்டு தலை அதிக சிரமமின்றி நல்ல விலைக்கு விலை போனது. புலித் தலையை ஒரு வேட்டை பிரியரான பிரபு ஒருவர் அதனை வாங்கி தன வீட்டில் அலங்காரமாக பாடம் செய்து மாட்டி வைக்க எடுத்து போனார்.

மீதமிருந்த மனித தலையைப் பார்த்த கூட்டம் அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின் வாங்கியது. ஒரு காசுக்குக் கூட அதை வாங்க ஆளில்லை. அந்த தலையை இனாமாகவாவது கொடுத்து விட முயன்றும், யாரும் வாங்க முன் வரவில்லை.

இப்போது அசோகர் கூறினார், "பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்பு கால் காசுக்குக் கூட பெறாது. இலவசமாக கூட இதை யாரும் தொட மாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்கு தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்றுனர்ந்தவர்கள் தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு?" என்றார்.



எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்தது  [குறள் # 125. அறத்துப்பால் - இல்லறவியல் - அடக்கமுடைமை]

--
ரெகார்ட்ஸ்
விஜயஷங்கர்


No comments: